ஈழத் தமிழர்களின் அவலவாழ்வைச் சித்திரிக்கும் படமான ‘கூட்டாளி” தமிழ்த் திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது.
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்தத் திரைப்படம்!
இத்திரைப்படத்தின் மிகச்சிறப்பான தித்திப்பான செய்தி ஈழத்து சுதந்திர பாடல் 5.34 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளமையே ஆகும்.
இப்படத்தின் கதை, வசனம், பாடலை வினுபாரதி எழுதியுள்ளார். இசை – நித்யன்கார்த்திக், ஒளிப்பதிவு – அகர்செங்குட்டுவன், படத்தொகுப்பு (எடிற்றிங்) – மோகன், சண்டைப் பயிற்சி – கஜினி குபேந்தர் மற்றும் எண்ணற்ற நடிகர், நடிகைகள் பங்கு பெற்றுள்ளனர்.
இத்திரைப்படம் அன்பு, பாசம், ஏக்கம், துரோகம், கோபம், வீரம், முடிவு என அனைத்தையும் எதார்த்தமான உண்மைகளை அப்பட்டமாக கொண்டு அமைந்துள்ளது.
இதன் தயாரிப்பு – திரைக்கதை – இயக்கம் சி.நிரோஜன் D.F.Tech. இது இவரின் மூன்றாவது படைப்பு. இவர் ஈழத்து இளம் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த கதையின் சாராம்சம் இதுதான்!
ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது.
ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது.
ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே!
வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும்.
சர்வாதிகாரத்தின் ஆயுள்? அற்ப ஆயுள் என்பதே அது.
போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.
இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேச விடுதலைக்காகவும் புது விடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள்.
அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள்.
அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் சந்தித்திருகின்றார்கள். ஆனால் அந்த மாசற்ற தலைவர்கள் இட்டுச் சென்ற பாதையில் பல்லாயிரம் வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தை கையிலெடுத்து அறவழியோ? ஆயுதவழியோ? விடுதலைப்போரை சிறந்தமுறையில் கையாண்டு அதில் ஈடு இணையில்லா வெற்றியை மக்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.
இது உலகறிந்த உண்மை. இக்கதையில் வரும் நாயகனும் மேற்கோள் காட்டிய பல்லாயிரம் வீரர்களுள் ஒருவன்.
திரைப்படம் விரைவில்….!






