‘ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ – இந்த விருப்பமோ ஆசையோ இல்லாத பொது ரசிகனையோ ரஜினி ரசிகனையோ பார்ப்பது அரிது!
ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை ஏகத்துக்கும் உண்டு. சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்ற பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் போட்டோ இதுதான். சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், உடம்பை பழைய நிலைக்குக் கொண்டுவர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் ரஜினி. தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.
மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் தன் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் ஒரு ரவுண்ட் வருகிறாராம் அதிகாலை நேரத்தில். ரஜினி வருவதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள்.
உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுக்க, சந்தோஷத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் பழைய உடல்நிலையுடனும் இருந்ததாக இந்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ‘ராணா’ மேலும் தாமதமாகும் என்று வரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.