சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1989 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உள்ளிட்ட பல மொழிகளில் ஐநூறிற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற “போறாளே பொன்னுத்தாயி” என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்காக இந்தியத் தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
பிறப்பு : 1973
பாலக்காடு, இந்தியா
இறப்பு : செப்டம்பர் 12, 2010 (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு
இசை வகை(கள்): பின்னணிப் பாடகி, கருநாடக இசை
தொழில் : பாடகி
இசைத்துறையில்: 1989–2010
வாழ்க்கைக் குறிப்பு
கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்டிங் ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர். 1987 இல் சென்னைக்கு வந்த போது எம். எஸ். விசுவநதனைச் சந்திக்க நேர்ந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எம்.எஸ்.வி அவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் இளையராஜா, மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோரின் இசையமைப்பில் பாடினார்.
1990 இல் தமிழில் வெளியான சத்ரியன், 95 இல் வெளியான ராணி ரத்னப்ரபா என்ற தெலுங்குப் படம், 95ல் இந்தியில் வெளியான ரங்கீலா படங்களில் இவர் பாடிப் பிரபலம் அடைந்தார். 90ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா… தேரோட்டமா…, சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற “போவோமா ஊர்கோலம்… ஆகிய பாடல்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
மறைவு
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்.



