நயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா!
கன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க இருக்கிறார் ஆண்ட்ரியா.
கன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க இருக்கிறார் ஆண்ட்ரியா.
தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இனிமையான குரல் வளம் கொண்ட இவர், படங்களில் நடிப்பதோடு, பாடவும் செய்கிறார்.
சமீபத்தில் வெளியான தனுஷின் வட சென்னை திரைப்படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆண்ட்ரியா. பவானி எண்டெர்டெயின்மென்டின் கமல் போரா இதனைத் தயாரிக்கிறார்.
இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்' உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர், ஃபேன்டஸி படமாக உருவாகும் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். கொச்சின், குஜராத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் காட்சிகளைப் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நாயகிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவரிசையில் தற்போது ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார்.