சூர்யாவின் 'அருவா' படத்தில் வாய்ப்பில்லை... பாலிவுட்டுக்கு போனார் மாளவிகா மோகனன்!
விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் இந்தி படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் இந்தி படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.
பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடத்திலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மற்றும் சாந்தனு, நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. வரும் 15 ஆம் தேதி பாடல் வெளியீடு நடக்கிறது.
இந்தப் படத்தை அவர் சூர்யா ஜோடியாக அருவா படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதை ஹரி இயக்குகிறார். அவர் மாளவிகாவை சந்தித்து கதை சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது ராஷ்மிகா மந்தனா சூர்யா ஜோடியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து மாளவிகாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.
தெலுங்கில் விஜயதேவரகொண்டா ஜோடியாக ஹீரோ படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாளவிகா இப்போது இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை, பர்ஹான் அக்தரின் எக்சல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. மற்ற நடிகர்கள் விவரங்கள் வெளியாகவில்லை.